செய்திகள்

பொன்னேரி அருகே பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி பலி

Published On 2018-06-20 06:44 GMT   |   Update On 2018-06-20 06:44 GMT
பொன்னேரி அருகே பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு பிரியன், பிரியதர்ஷினி, பிரகதி என்கிற ஐஸ்வர்யா (வயது 4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். 3 பேரும் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பிரகதி யூ.கே.ஜி. படித்து வந்தார்.

குழந்தைகள் 3 பேரையும் வழக்கமாக கல்பனா அரசு பஸ்சில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் குழந்தைகளுடன் பள்ளி செல்வதற்காக அதே பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது சோழவரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அந்த வேன் திடீரென பஸ்சுக்காக்கா காத்திருந்த கல்பனா மற்றும் அவர்கள் குழந்தைகள் மீது மோதியது. இதில் வேனின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பிரகதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கல்பனாவும், அவரது மற்ற 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பிரகதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்பனா அலறி துடித்தது பரிதாபமாக இருந்தது. விபத்து பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

ஆத்திரம் அடைந்த அவர்கள் வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வேன் டிரைவர் கோளூரை சேர்ந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து ஏற்படுத்திய டிரைவரை கிராம மக்கள் பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

Tags:    

Similar News