செய்திகள்

பண்ருட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-06-19 11:37 GMT   |   Update On 2018-06-19 11:37 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி.தெருவில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்து விட்டு கோவில் பூசாரி சங்கர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவு கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இன்று காலை கோவிலை சுத்தம் செய்வதற்காக வந்த தொழிலாளி ஒருவர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளைபோய் இருந்தது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த கோவிலில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News