செய்திகள்

சிற்றார் அணையில் மூழ்கிய பெயிண்டர் பலி

Published On 2018-06-18 17:34 GMT   |   Update On 2018-06-18 17:34 GMT
சிற்றார் அணை தண்ணீரில் மூழ்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

அருமனை:

குலசேகரம் பொன்மனை பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 30). பெயிண்டர். நேற்று இவர் தனது நண்பர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சிற்றார்-2 அணைப் பகுதிக்கு குளிக்கச் சென்றார்.

அப்போது ராஜூ தனது நண்பர்களிடம் நான் ஒரு தனியார் தோட்டம் வழியாக அணைக்கு சென்று அங்கிருந்து அணையில் குதித்து மறுகரைக்கு வருகிறேன். நீங்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

அணையில் குதித்து மறுகரைக்கு செல்ல முயன்ற ராஜூ திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவர் உயிருக்கு போராடுவதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் தண்ணீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராஜூ நீரில் மூழ்கி மாயமானார்.

இதுபற்றி அவரது நண்பர்கள் கடையாலுமூடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெகுநேரமாக தேடியும் ராஜூவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் இரவாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இன்று 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சிற்றார்-2 அணைக்கு சென்று ராஜூவை தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு ராஜூ பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது உடலை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ராஜூ உடலை போலீசார் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த சம்பவம் அருமனை, குலசேகரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News