செய்திகள்

கடலூர் பகுதியில் சூறை காற்று: 200 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்தன

Published On 2018-06-18 10:26 GMT   |   Update On 2018-06-18 10:26 GMT
கடலூர் பகுதியில் நேற்று வீசிய சூறை காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் இடி-மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கடலூர், திருப்பாதிரிப்புலியூர், ராமாபுரம், முதுநகர், மஞ்சக்குப்பம், தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி-மின்னல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதில் நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில் மின் கம்பம் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் கடலூர் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

கடலூர் அடுத்த ராமாபுரம், வி.காட்டுப்பாளையம், ஒதியடிக்குப்பம், காத்தாங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரம் விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.

நேற்று வீசிய சூறை காற்றில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இது பற்றி விவசாயி சிற்றரசன் என்பவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் நேற்று மாலை சூறை காற்றுடன் மழை பெய்தது. சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். ஒரு ஏக்கர் வாழை பயிரிடுவதற்கு குறைந்தது ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது.

நேற்று பலத்த சூறை காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் வாழை தார்கள், வாழை பிஞ்சுகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமானது.

இந்த பாதிப்பில் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் சுமார் ரூ.2 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் முறிந்து விழுந்து சேதமான வாழை மரங்களை நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News