செய்திகள்

கரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

Published On 2018-06-17 16:07 GMT   |   Update On 2018-06-17 16:07 GMT
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூரிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டதுடன் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிலவேம்பு கசாயம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மற்றும் தண்ணீர் தேங்கிய இடங்களில் தூவுவதற்கான பிளீச்சிங் பவுடர் போன்றவைகள் தேவையான அளவில் இருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீர் குளோரினே‌ஷன் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பொதுமக்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருகவேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். தற்போது 7 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர், மழைநீர், போன்றவைகள் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து தங்களை பாதுகாத்துக்கொள்வதுடன் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைக்கவேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு டெங்கு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News