ரெட்டியார்பாளையத்தில் வாலிபர்கள் மீது தாக்குதல்
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் லாம்பேட் சரவணன் நகரை சேர்ந்தவர் ராமு (வயது25), பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ராமுவும், அவரது நண்பர்களான சக்திவேல், முருகன், சூர்யா ஆகியோர் அதே பகுதியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். வேலுவும், அவரது நண்பர்களான வினோத், ஸ்டீபன், செல்வா ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது வேலு ராமுவிடம் இங்கு ஏன் நிற்கிறாய் என கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த வேலு அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராமுவையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ராமுவும், சக்திவேலுவும் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் ராமு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சக்திவேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராமு ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து வேலு மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.