மரக்காணத்தில் கடல் சீற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
மரக்காணம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15- ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களுக்கான இனபெருக்க காலமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதை தவிர்த்தனர். மாறாக சிறிய படகுகளை கொண்டு கரையோர பகுதிகளில் மட்டும் மீன்பிடித்து வந்தனர்.
இதை போல் மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் மீன்பிடி தடை காலத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை .
அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடி தடைகாலத்தை பயன்படுத்தி படகுகளை சீரமைத்து, வர்ணம் தீட்டுதல், மீன்பிடி வலைகளை சரி செய்தல், புதிய வலைகளை பின்னுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் அரசு அறிவித்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து மரக்காணம் பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்தனர் .
ஆனால் இன்று மரக்காணம் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது . சுமார் 7 அடி உயர அளவில் அலைகள் எழுந்தன.
இதனால் மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அனுமந்தை, கூனிமேடு குப்பம், சின்ன முதலியார் சாவடி, எக்கியார் குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க வில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மரக்காணம் கடற்கரை பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.
மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.