செய்திகள்

ரெயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2018-06-13 10:27 GMT   |   Update On 2018-06-13 10:27 GMT
ரெயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 15 கிலோ ‘கஞ்சா’வை மாறுவேடத்தில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

மத்திய பிரதேச மாநிலம் தான்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புலாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

அந்த ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் உஷார் அடைந்த போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். சேலம் மாவட்டம் வீரபாண்டியில் இருந்தே மாறுவேடத்தில் கண்காணித்தபடி இருந்தனர்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றது. போதை பொருள் தடுப்பு போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக கூறப்பட்ட பொது பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு ‘மர்ம’ பை கிடந்தது. அதை போலீசார் பிரித்து பார்க்கும் போது அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆனால் அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி யார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News