திண்டுக்கல் அருகே ஆட்டோக்கள் மோதி கொண்டதில் 7 பேர் படுகாயம்
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள வண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 26). ஆட்டோ டிரைவர். நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த பவுனுத்தாய், கவுசல்யா, மகாலெட்சுமி ஆகியோரை ஏற்றிக் கொண்டு எரியோடு பகுதிக்கு விசேஷத்திற்கு சென்றார்.
எதிரே குளத்தூரைச் சேர்ந்த கண்ணன் (வயது 36). தனது ஷேர் ஆட்டோவில் பஞ்சவர்ணம், நந்தினி ஆகியோர்களை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். தனியார் கல்லூரி அருகே 2 ஆட்டோக்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதில் 2 ஆட்டோவிலும் வந்த 7 பேர் படுகாய மடைந்தனர். மேலும் ஆட்டோக்களும் பலத்த சேதமடைந்தது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனைவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.