செய்திகள்
பிடிப்பட்ட போதை பொருட்கள்.

துரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி விற்ற போதை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2018-06-12 06:15 GMT   |   Update On 2018-06-12 06:15 GMT
சென்னை துரைப்பாக்கத்தில் வீட்டில் பதுக்கி விற்ற போதை பாக்குகள், குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:

சென்னை துரைப்பாக்கம், கண்ணகிநகர், மேட்டுக்குப்பம், பெருங்குடி, கந்தன் சாவடி, சோழிங்கநல்லூர் போன்ற பகுதியில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் லோகநாதனுக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து உதவி ஆணையாளர் லோகநாதன் தலைமையில் தனிப்படையினர் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்க நல்லூர் சுற்று வட்டார பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை போலீசாருக்கு துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் வி.ஜி.பி. அவென்யூவில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் இருந்து 300 கிலோ போதை பாக்குகள், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இங்கு போதை பொருட்களை தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த நித்யானந்தம், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அதேபோல் நீலாங்கரையிலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஒன்றை சோதனையிட்டதில் 2 குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோவில் இருந்த அய்யனார் என்பவரிடம் விசாரித்த போது அனுமன் காலனி ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த 6 மூட்டை குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து அய்யனார் கைது செய்யப்பட்டார். சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News