செய்திகள்
செல்வக்குமார்

சின்னசேலத்தில் ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணம்

Published On 2018-06-11 10:20 GMT   |   Update On 2018-06-11 10:20 GMT
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒகையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம்(வயது 45). இவரது மகன் செல்வக்குமார்(19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த வாரம் தர்மலிங்கம் ஒகையூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தின் ஆதார் கார்டு கொண்டு வரும்படி செல்போன் மூலம் தர்மலிங்கத்தின் மகன் செல்வக்குமாரிடம் கூறினர்.

இதனைத்தொடர்ந்து தர்மலிங்கத்தின் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு செல்வக்குமார் ஒகையூரில் இருந்து சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். நேற்று இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ரெயிலில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. செல்வக்குமார் அந்த ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்படத் தொடங்கியது. அப்போது ரெயில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த செல்வகுமார் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
Tags:    

Similar News