செய்திகள்

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ரவுடிகள் கத்தி-அரிவாளுடன் ரகளை

Published On 2018-06-11 09:05 GMT   |   Update On 2018-06-11 09:05 GMT
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ரவுடிகள் கத்தி மற்றும் அரிவாளுடன் ரகளை ஈடுபட்டனர் இதில் 3 பேரை அரிவாளால் வெட்டினர்.
சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு மோட்டார்சைக்கிள்களில் 20-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

அவர்கள் கத்தி, அரிவாளுடன் ஒவ்வொரு தெருவாக அலறியபடி சுற்றி வந்தனர். இதனை பார்த்து பொதுமக்கள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்.

அப்போது சாலையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர், அஜித் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டினர்.

பின்னர் அங்குள்ள திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளை அரிவாளால் வெட்டினர். மேலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லோடு ஆட்டோவின் கண்ணாடியையும் நொறுக்கினர். இதைத் தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதில் பதிவானவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இரண்டு ரவுடி கும்பலுக்கும் இடையே யார் பெரியவர் என்று காட்டுவதற்காக இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து ரவுடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News