செய்திகள்

நீதிபதி மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு- கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

Published On 2018-06-11 11:01 IST   |   Update On 2018-06-11 11:01:00 IST
சூலூரில் நீதிபதி மனைவியிடம் 9 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி.

இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு செல்வபாண்டி தனது மனைவி மகேஷ்வரியுடன்( 40) கடைக்கு சென்றுவிட்டு தங்களது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சூலூர் பெரிய குளத்தின் அருகே வரும் போது திடீரென்று பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மகேஸ்வரி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுபற்றி சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை.

சம்பவ இடத்தின் அருகே உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

சூலூர் பகுதியில் தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை சம்பவங்களை தடுக்கக்கோரி சமீபத்தில் பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பின்னர் அனைத்துகட்சி சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News