செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாளில் 5 அடி உயர்வு

Published On 2018-06-07 15:06 GMT   |   Update On 2018-06-07 15:06 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாளில் 5 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.

சேலம்:

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை ஒகேனக்கலில் 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 2038 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2594 கன அடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கடந்த 27-ந் தேதி 34.28 கன அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று 39.15 கன அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் 5 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News