செய்திகள்
கல்லூரி பேராசிரியையை தாக்கி கொலை மிரட்டல்: வருவாய் ஊழியர் மீது வழக்கு
கல்லூரி பேராசிரியையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வருவாய் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலம்- சோழவந்தான் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் பாண்டி. புதுக்கோட்டையில் வருவாய்த்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி வித்யா (வயது 27). விருதுநகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வித்யா தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பாண்டி, வித்யா வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வித்யா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
வருவாய் ஊழியர் பாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.