செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சமூகவிரோதிகளை தூண்டி விட்டவர்கள் மீது நடவடிக்கை- இல.கணேசன் பேட்டி

Published On 2018-06-03 10:28 GMT   |   Update On 2018-06-03 10:28 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என இல.கணேசன் கூறினார். #ilaganesan #tuticorinfiring

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் அந்த போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகவிரோதிகள் யார்? என்பதையும், அவர்களை தூண்டிவிட்டவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

சமூகவிரோதிகளை தூண்டி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். மேலும் இந்த போராட்டத்துக்கு தொடர்பு இல்லாதவர்களும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறுவதற்கான திட்டம் பற்றி தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அவரது ஆலோசனைப்படி அதற்கான திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

தற்போது அது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் 42 அமைப்பு மாவட்டங்களில் தற்போது மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தலை நோக்கிய பயணத்திட்டம் பற்றி விளக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் சாதனை திட்டங்களை தமிழக மக்களிடம் பாரதீய ஜனதா கொண்டு செல்லும். அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வியூகம் வகுத்து செயல்படமுடியும். விலை மதிக்கமுடியாத ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #tuticorinfiring

Tags:    

Similar News