முத்துப்பேட்டை அருகே மளிகை கடையில் ரூ.46 ஆயிரம் கொள்ளை
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(48). இவர் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் செல்வராஜ் கடையில் இருந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தங்களிடம் 100 ரூபாய் நோட்டுகள் 20 உள்ளது. திருமணத்திற்கு மொய் கவரில் வைக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
செல்வராஜிம் 100 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது செல்வராஜ் கடை கல்லாவில் இருந்த பணத்தை கவனித்த வாலிபர்கள் மளிகை சாமான்கள் வாங்குவது போல் நடித்து 10 கிலோ வெங்காயம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்த கடையில் செல்வராஜ் பல்லாரியை எடுக்க சென்றபோது வாலிபர்கள் கடை கல்லாவில் இருந்த ரூ.46 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். பின்னர் அங்கு வந்த செல்வராஜ் வாலிபர்கள் 2 பேரையும் காணாததால் குழப்பமடைந்தார்.
கடையில் கல்லாவில் இருந்த பணத்தை பார்த்த போது அது கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சிய அடைந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடிவருகின்றனர்.