பெரம்பலூரில் நீர்நிலைகளை பாதுகாக்ககோரி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், விஸ்வகுடி நீர்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும், நீர் வழித் தடங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நீர் நிலைகளை தூர்வாரி பராமரித்து நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்து போனதால் குடிநீரில் உப்புத் தன்மை அதிகரித்து சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகளால் அவதியுறும் பொதுமக்களை காப்பாற்றும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.கே. விஸ்வநாதன், தேசிய மனித உரிமைகள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் கோசிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.