செய்திகள்

பெரம்பலூர் அருகே இரு தரப்பினர் மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2018-05-29 11:00 GMT   |   Update On 2018-05-29 11:00 GMT
பெரம்பலூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் சங்கு பேட்டையை சேர்ந்தவர்கள் சிவா, திவான். இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் திருட்டு போனது.

இந்தநிலையில் பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த சரண்ராஜ், அமிழ்தன் ஆகிய 2 பேரும்தான் பொருட்களை திருடியதாக சிவா,திவான் எண்ணினர். இதையடுத்து அவர்கள் தங்களது நண்பர்கள் வல்லரசு, பிரபாகரன், மணி, சூரியா, தமிழ், யூவான் ஆகிய 8 பேருடன் கத்தி, அரிவாள், உருட்டு கட்டையுடன் பெரம்பலூர் துறைமங்கலம் சென்றனர். அப்போது அங்கு வந்த சரண் ராஜ், அமிழ்தன் ஆகியோரிடம் பொருட்கள் திருட்டு போனது குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனிடையே சரண்ராஜ்க்கு ஆதரவாக அவர்களது நண்பர்கள் 8 பேர் வந்தனர். இதனால் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். இதில் சரண்ராஜ், அமிழ்தன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இது குறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சரண்ராஜ், அமிழ்தன் ஆகிய 2 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இருதரப்பினரை சேர்ந்த 16 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News