செய்திகள்
தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீங்கியது
தூத்துக்குடியில் வன்முறையை தொடர்ந்து போலீசார் விதித்திருந்த 144 தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டது. #SterliteProtest #Thoothukudi
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கை பராமரித்திட கடந்த 21ம் தேதி இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட முன்னாள் கலெக்டர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
பேரணியாக சென்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு காரணமாக இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் தற்போது இயல்புநிலை திரும்புவதையடுத்து கடந்த 5 நாட்களாக அமலில் இருந்த தடை உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. எனவே, 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார். #SterliteProtest #Thoothukudi