செய்திகள்

மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-05-26 13:42 GMT   |   Update On 2018-05-26 13:42 GMT
மூலகுளத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை மூலகுளம் ஜெ.ஜெ. நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தொப்புளான். இவரது மனைவி அகஸ்தினி (வயது 56). இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையே 2 மகள் மற்றும் இளைய மகனுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் மூத்த மகன் செந்தமிழனுக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை. இதனால் அகஸ்தினி மனவேதனையில் இருந்து வந்தார்.

மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததை பலரிடம் கூறி அகஸ்தினி வருத்தப்பட்டு வந்தார். நேற்று மகன் வேலை முடிந்து வீடு திரும்பியதும் செந்தமிழனிடம் திருமணம் பற்றி அகஸ்தினி பேசினார். அப்போது செந்தமிழன் இனிமேல் திருமணம் பற்றி யாரும் பேச வேண்டாம் என கூறி விரக்தியுடன் வீட்டின் மாடிக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த அகஸ்தினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தொப்புளான் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அகஸ்தினியை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அகஸ்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News