கூடலூர்:
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் குளங்கள், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து கூடி வருகிறது. நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 127 அடியை எட்டியுள்ள நிலையில் தற்போது அணைக்கு 136 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.40 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 37.14 அடியாக உள்ளது.
நீர்வரத்து 152 கன அடி. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடி. வரத்து 15 கன அடி.
பெரியாறு 10.8, தேக்கடி 17.2, கூடலூர் 9.8, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 10.2, வைகை அணை 38.2, மஞ்சளாறு 14, சோத்துப்பாறை 16 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.