செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2018-05-24 16:48 GMT   |   Update On 2018-05-24 16:48 GMT
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார். இதில் 5 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விதிமுறைகளை பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களில் தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? மற்றும் வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்வதற்கான தகுதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 106 பள்ளி வாகனங்களில் தற்போது 85 பள்ளி வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி போன்ற வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையில் 5 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பள்ளி வாகனங்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாக கவனத்திற்கு டிரைவர்கள் எழுத்து பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் டிரைவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு போல நடப்பு கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு பள்ளி வாகன டிரைவர்கள்் செயல்பட வேண்டும் என்பது குறித்த தீயணைப்பு வீரர்களின் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வட்டார போக்கு வரத்து அதிகாரி செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள், பள்ளி வாகன டிரைவர்கள் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News