செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

Published On 2018-05-24 12:54 GMT   |   Update On 2018-05-24 12:54 GMT
சிறுமுகை அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். சவரத்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 45 ). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 20 -ந் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் சுப்புலட்சுமியின் தலை முடியை வேகமாக பிடித்து இழுத்து கீழே தள்ளினார். பின்னர் வேல்முருகன் தூங்க சென்றனர்.

மறுநாள் வேல்முருகன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுப்புலட்சுமி எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரது மகன்கள் தனது தாயை எழுப்பிய போது அவர் படுக்கையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் , சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை செய்த போது சுப்புலட்சுமி கழுத்து எலும்பு உடைந்து இறந்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவான வேல்முருகனைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் வேல்முருகன் இலுப்பநத்தம் கிராம நிர்வாக அதிகாரி நாகராஜ் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை கிராம நிர்வாக அதிகாரி சிறுமுகை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வேல்முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News