செய்திகள்

ரெயில்கள் தாமதம்: திருத்தணி ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல்

Published On 2018-05-23 16:32 GMT   |   Update On 2018-05-23 16:32 GMT
திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் காலதாமதமாக வந்தால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு:

திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் காலதாமதமாக வந்து செல்கின்றன. இதனால் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்வோரும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி ரெயில்வே ஊழியர்களிடம் புகார் செய்தும் வழக்கம் போல் ரெயில்கள் தாமதமாக வந்து சென்றன.

இந்த நிலையில் இன்று அதிகாலை திருத்தணி ரெயில் நிலையத்தில் சுமார் 200-க் கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி செல்லும் விரைவு ரெயில் தாமதமாக வந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரெயிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து திருத்தணிக்கு வந்த  மின்சார ரெயிலையும் மறித்தனர். பயணிகள் அனைவரும் தண்டவாளத்தில் நின்றபடி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருத்தணி டி.எஸ்.பி. சேகர், தாசில்தார் நரசிம்மன், ரெயில்வே இன்ஸ்பெக்டர் முகேஷ் ரஷாக் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து  பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News