மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலு வலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் அலுவலக வளாகத்துக்குள் திடீர் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தெற்குத் தெரு கிராமத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து ஒரு பிரிவினர் வேலி அமைத்துள்ளனர். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அட்டைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தெற்குத்தெரு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆக்கிரமித்து இரும்பு வேலி போட்டுள்ளனர்.
இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற மாவட்ட கலெக்டர் ஏற்கனவே உத்தரவிட்டும் அவர்கள் அக்கிரமிப்பை அகற்ற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இனிமேலாவது கடும் நடவடிக்கை எடுத்து நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனர்.