செய்திகள்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சுரங்கப் பாதையில் வாலிபர் படுகொலை

Published On 2018-05-15 06:29 GMT   |   Update On 2018-05-15 06:29 GMT
ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சுரங்கப்பாதையில் அடையாளம் தெரியாத வாலிபர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சுரங்கப்பாதை உள்ளது. இதன் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

அவர் நீலநிற ஜீன்ஸ், பச்சை நிற டிசர்ட் அணிந்து இருந்தார். அவரது பையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் இருந்தது. அவரது காலில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

மின்சார ரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்த போது மர்ம கும்பலுடன் தகராறு ஏற்பட்டு இருக்கலாம் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது மர்ம கும்பல் அவரை வெட்டி சாய்த்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அங்கேயே அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையுண்ட வரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News