செய்திகள்

அரியலூரில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-05-13 20:13 IST   |   Update On 2018-05-13 20:13:00 IST
அரியலூரில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள பள்ளிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தை சேர்ந்த அருள்செல்வி (வயது 21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துள்ளனர். மேலும் அருள்செல்வி குடும்பத்தினர் திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுத்த பொருட்களை திருப்பி கேட்டுள்ளனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகர் நீதி நெப்போலியன் (வயது 57) என்பவர் இருவீட்டாரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் செல்வக்குமார் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.

அந்த பொருட்களை நீதி நெப்போலியன் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிநெப்போலியனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அருள் செல்விக்கு நீதி நெப்போலியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நீதி நெப்போலியனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை மாவட்ட எஸ்.பி.அபினவ் குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். 

இதேபோல் அரியலூர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மத்து மடத்தியை சேர்ந்த சுந்தர் ராஜன் (41), மேலூரை சேர்ந்த பாலமுருகன் (38) ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News