செய்திகள்

பல்கலைக்கழக மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2018-05-12 17:59 IST   |   Update On 2018-05-12 17:59:00 IST
பல்கலைக்கழக மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

கேரளாவை சேர்ந்தவர் அக்‌ஷயா (வயது 22). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலை இவர் புதுவை தீயணைப்பு நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அக்‌ஷயாவிடம் இருந்து செல்போனை பறித்தனர். அக்‌ஷயா திருடன்... திருடன் என அலறுவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அக்‌ஷயா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் 2 வாலிபர்கள் புதுவை பழைய சட்ட கல்லூரி அருகே நின்று கொண்டு அவ்வழியே சென்றவர்களிடம் செல்போன் விற்பனைக்கு உள்ளதாக கூறி விலை பேரம் பேசி கொண்டு இருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு செல்போனை விற்க பேரம் பேசிக்கொண்டு இருந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திப்புராயப் பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த மலர்வாணன் (19) மற்றும் புதுவை இளங்கோ நகர் அருகே உள்ள சாந்தி நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (19) என்பதும், இவர்கள் பல்கலைக்கழக மாணவி அக்‌ஷயாவிடம் செல்போனை பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் மது குடித்து விட்டு புதுவைக்கு சுற்றுலா வரும் வெளிமாநில பயணிகளை குறிவைத்து அவர்களிடம் தகராறு செய்து செல்போனை பறித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News