செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2018-05-03 07:57 GMT   |   Update On 2018-05-03 07:57 GMT
பெரியபாளையம் - சென்னை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.
பெரியபாளையம்:

சோழவரம், பெரியார் நகரை சேர்ந்தவர் ஜான் வெஸ்லி (வயது 18). பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.

இவர் உடன் படிக்கும் நண்பர்களான சோழவரத்தை சேர்ந்த சுரேந்தர் (18), காரனோடையை சேர்ந்த ஜெய்பிரகாஷ் (18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள மற்றொரு நண்பர் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சோழவரம் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பெரியபாளையம் - சென்னை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் தனியார் இறால் கம்பெனி அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஜான் வெஸ்லி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த சுரேந்தர், ஜெய்பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்தர் பரிதாபமாக இறந்தார். ஜெய் பிரகாசுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News