செய்திகள்

ஊத்துக்கோட்டையில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை

Published On 2018-05-02 10:46 GMT   |   Update On 2018-05-02 10:46 GMT
கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஊத்துக்கோட்டையில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் நேற்று இரவு பயங்கர சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை 12 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு மீண்டும் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டையிலிருந்து சத்தியவேடு வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழி நெடுகிலும் மாந்தோப்புகள் உள்ளன. சூறாவளி காற்று, மழையால் டன் கணக்கான மாங்காய்கள் அறுந்து விழுந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். சூறாவளி காற்றுக்கு பல பகுதிகளில் மரங்கள் வேராடு சாய்ந்ததால் வாகன போக்குவரத்து தடை பட்டது.

கடந்த ஒரு மாதமாக சுட்டெரித்த வெயில் காரணமாக வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த பொது மக்கள் திடீர் ஆலங்கட்டி மழையால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல் செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலும் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
Tags:    

Similar News