செய்திகள்

பெருந்துறை சிப்காட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி- உறவினர்கள் சாலை மறியல்

Published On 2018-04-26 18:00 IST   |   Update On 2018-04-26 18:00:00 IST
பெருந்துறை சிப்காட் தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார். இறப்புக்கு காரணமானவர் மீது நடவடிகக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஈரோடு ஆர்என் புதூர், மாயபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (50) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் இந்த நிறுவனத்தில் ஜெனரேட்டர் ரூமின் முன்பகுதியில் தலையில் காயமடைந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்ககாக போலீசார் சேர்த்தனர்.

அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவர் மின்சாரம் தாக்கி இறந்து போனது தெரிய வந்தது. இதனால் பெருமாளின் இறப்புக்கு காரணமான தொழிற்சாலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பெருமாளின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கூறினர்.

இது தொடர்பாக சென்னிமலை போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரவுண்டானா பகுதியில் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மலையம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தொழிற்சாலை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதியளித்ததின் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Similar News