செய்திகள்
சாலையோர மைல்கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
கோபியில் சாலையோர மைல்கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோபி:
கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் காளிச்சாமி(வயது 32). கூலிதொழிலாளி.
இவரது மனைவி தனலட்சுமியும், மகன் பிரதாப்பும் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூருக்கு சென்றிருந்தனர். அவர்களை கோபிக்கு அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் காளிச்சாமி நேற்று இரவு சென்றார்.
ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது நிலை தடுமாறி ஓடிய மோட்டார் சைக்கிள் சாலையோர மைல் கல்லில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட காளிச்சாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே காளிச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.