செய்திகள்

ஆண்டிமடம் அருகே ஏரியில் மூழ்கி சிறுமி பலி

Published On 2018-04-04 12:58 GMT   |   Update On 2018-04-04 12:58 GMT
ஆண்டிமடம் அருகே ஏரியில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடியை சேர்ந்தவர் பழனிவேல்-ராணி. இந்த தம்பதியின் மகள் கலையரசி (வயது 13), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார்.

சம்பவத்தன்று தனது தோழிகளுடன் அருகில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழம் அதிகமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியபடி சத்தம் போட்டுள்ளார். இதனை குளக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

அதற்குள் சிறுமி கலையரசி மூச்சு திணறி நீருக்குள் மூழ்கினார். நீண்ட நேரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிவேல்-ராணி சம்பவ இடத்திற்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். அது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News