செய்திகள்

சீரான முறையில் குடிநீர் வழங்காததால் பெண்ணாடம் அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

Published On 2018-03-29 17:57 IST   |   Update On 2018-03-29 17:57:00 IST
பெண்ணாடம் அருகே சீரான முறையில் குடிநீர் வழங்காததால் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வடகரை. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு அங்குள்ள நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக நீர்த்தேக்க தொட்டியில் உள்ள மின் மோட்டார் அடிக்கடி பழுது ஏற்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் சீரான முறையில் வடகரை கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், மனுக்களும் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று மதியம் 12 மணியளவில் வடகரை கிராம பெண்கள் சிலர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் வடகரை- பெண்ணாடம் சாலை ஓரத்தில் காலிக்குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்தும், அதற்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews

Similar News