பணம், பாத்திரத்துக்காக ஓட்டுரிமையை 5 வருடம் அடமானம் வைக்கக்கூடாது- கனிமொழி பேச்சு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரளை என்ற இடத்தில் வருகிற 24, 25-ந் தேதிகளில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு திடலை கனிமொழி எம்.பி. இன்று பார்வையிட்டார். மாநாட்டு மேடை அமைக்கும் பணி, தொண்டர்கள் அமரும் இடம், மாநாட்டு பந்தல் முகப்பு அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் பார் வையிட்டார்.
பின்னர் மாநில, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள்தான் இருக்க வேண்டும். அதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் மகளிர் அணி அமைப்பாளர்கள் பெண்களை அழைத்து வர வேண்டும்.
மாநாட்டையொட்டி மகளிருக்கான பாதுகாப்புக்காக 6 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்படும். உடல் நிலை கோளாறு ஏற்பட்டால் பார்க்க 4 மருத்துவ மையங்கள் மாநாட்டு திடலில் செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் 2 படுக்கை வசதிகள் செய்யப்படும்.
பெண்களுக்காக மற்றும் தொண்டர்களுக்காக 150 கழிவறைகள் அமைக்கப்படுகிறது. மேலும் அதிக கழிவறைகள் அமைக்கவும், குடிநீர் வசதி செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் மையமும் அமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்காக 600 பேர் கொண்ட மகளிர் பாதுகாப்பு படை செயல்படும். குறைந்த கட்டணத்தில் உணவுக்கூடம் செயல்படும்.
ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதை நாம் கருத்தில் கொண்டு மாநாட்டுக்கு ஏராளமான பெண்களை அழைத்து வரவேண்டும்.
முக்கிய கால கட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழகம், இந்தியாவே இந்த மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறது. செயல் பாடற்ற அரசு தற்போது செயல்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
பணம், பாத்திரத்தை பெற்றுக்கொண்டு 5 வருடத்துக்கு நாம் ஓட்டுரிமையை அடமானம் வைக்கிறோம். அவ்வாறு செய்யாமல் பெண்கள் விழிப்புடன் இருந்து சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும்.
கூட்டத்தில் மாநாட்டுக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews #kanimozhi #vote