பண்ருட்டியில் பஸ் மோதி வாலிபர் படுகாயம்
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). மர வேலை செய்யும் ஆசாரி.
இவர் பண்ருட்டியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பண்ருட்டியில் கெடிலம் ஆற்றுபாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வடலூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளுடன் பஸ்சுக்கு அடியில் சிக்கினார். அவரது உடல் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews