செய்திகள்

துரைப்பாக்கத்தில் விலைக்கு வாங்குவதாக கூறி ரூ.10 லட்சம் காருடன் 2 வாலிபர்கள் ஓட்டம்

Published On 2018-01-08 09:17 GMT   |   Update On 2018-01-08 09:17 GMT
துரைப்பாக்கத்தில் விற்பனைக்கு வந்த காரை ஓட்டி பார்ப்பதாக கூறி ரூ.10 லட்சம் மதிப்புள்ள காருடன் இரண்டு வாலிபர்கள் தப்பி ஓடினர்.
திருவான்மியூர்:

துரைப்பாக்கம் சந்திரசேகர் அவென்யூவை சேர்ந்தவர் பிரிட்டோ (40). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஆன் லைனில் விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த டிப்-டாப் வாலிபர்கள் 2 பேர் இன்று காலை பிரிட்டோ வீட்டுக்கு வந்தனர்.

விற்பனைக்குரிய காரை பார்த்த அவர்கள் பணம் முழுவதையும் உடனடியாக கொடுத்து வாங்க இருப்பதாக கூறினர். அதற்கு முன்னதாக காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்றனர்.

அவர்களது பேச்சை நம்பிய பிரிட்டோ அதற்கு சம்மதித்தார். அதன்பின்னர் காரை எடுத்துக் கொண்டு 2 வாலிபர்களும் புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. எனவே காருடன் அவர்கள் மாயமாகி விட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து கண்ணகி நகர் போலீசில் பிரிட்டோ புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரையும், அதை ஓட்டிச் சென்ற வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News