தே.மு.தி.க. பிரமுகர் கொலை: கூலிப்படையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வாய்மேடு, மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் முருகேசன் (வயது 35). தே.மு.தி.க. பிரமுகர். இவர் கடந்த 23-ந்தேதி மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி முருகேசனின் தம்பி ராமச்சந்திரன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகட்டூரை சேர்ந்த மோகன், குணசேகரன், பலராமன், வாய்மேடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் குணசேகரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய 2 பேரை தேடிவந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் தலைமறைவாக இருந்த 2 பேர் திருச்சியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சத்திய நாராயணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புஷ்வனம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் என்ற குணசேகரன் (வயது 25), திருச்சியை சேர்ந்த ஜம்புநாதன் மகன் பரணிதரன் (30) என்பதும், அவர்கள் இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்கள் எதற்காக முருகேசனை கொலை செய்தனர்.? அவர்களை கொலை செய்ய தூண்டியவர்கள் யார்? எனபது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.