செய்திகள்

சித்தோடு அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி

Published On 2017-11-30 15:51 IST   |   Update On 2017-11-30 15:51:00 IST
சித்தோடு அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் பூபதி (வயது 21). பெருந்துறை சிப் காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் தனது நண்பர் திருமணத்துக்கு சென்றார். நேற்று நள்ளிரவு 11 மணியளவில் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

சித்தோடு அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே பவானி காளிங்கராயன்பாளையம் சின்னசாமி செட்டி வீதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இவர் சித்தோடு பால் பண்ணையில் பணிபுரிந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து துடித்தனர்.

இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். 2 வாலிபர்களின் உடல்களும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அங்கு அவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர். இந்த விபத்து குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News