செய்திகள்

கதிராமங்கலம் அருகே தொழிலதிபரை தாக்கி கடத்தப்பட்ட கார் மீட்பு

Published On 2017-11-29 16:43 GMT   |   Update On 2017-11-29 16:43 GMT
தொழிலதிபரை தாக்கி காரையும் அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். அந்த கார் அரியலூர் அருகே மீட்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

நாகப்பட்டினம் மாவட்டம்  குற்றாலம் அருகே உள்ள திருவாவடுதுறையை சேர்ந்த ஜெகபர் அலி மகன் முகமது பகத் (வயது 26). தொழிலதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சொகுசு காரில் கதிராமங்கலம் அருகே குணதலைப்பட்டி  பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3பேர், காரை வழிமறித்து முகமது பகத்தை சரமாரி தாக்கினர். பின்னர் காரையும், அதில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இது குறித்து முகமது பகத்,  பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் காரை கடத்தியவர்களை பிடிக்க  திருவிடைமருதூர் டி.எஸ்.பி. வெங்கடேசன், தலைமையில் இன்ஸ்பெக்டர் பகவதிசரணம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி காரை கடத்தி சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்  நாச்சியார் பேட்டை அருகே மர்மமான முறையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடையார் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த டேப் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது. தொடர்ந்து அந்த கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தியதில் முகமது பகத்துக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. அதனை கடத்திய மர்ம நபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News