செய்திகள்

ஏட்டு மனைவி கொலை வழக்கில் 9 ஆண்டாக தலைமறைவாக இருந்த உறவினர் கைதானார்

Published On 2017-11-23 12:33 GMT   |   Update On 2017-11-23 12:33 GMT
அரியலூரில் ஏட்டு மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த உறவினரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவர் கீழப்பழூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மைதிலி. இவர்களுடன் பரமசிவத்தின் உறவினர் அண்ணாதுரை என்பவர் வீட்டில் தங்கியிருந்து தோட்ட வேலைகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் பரமசிவத்திற்கு மனைவி மைதிலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அண்ணாத்துரையும் பரமசிவமும் சேர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மைதிலியை வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் பரமசிவம் வேலைக்கு சென்று விட்டார்.

அண்ணாத்துரை சென்னைக்கு சென்று அங்குள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். உடனே அரியலூர் போலீசார் சென்னைசென்று மனு கொடுத்து அண்ணாதுரையை மீட்டு அரியலூர் கூட்டி சென்று விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாத்துரை நானும் பரமசிவமும் சேர்ந்து தான் மைதிலியை கொலை செய்தோம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அரியலூர் போலீசார் பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அண்ணாத்துரையை சென்னை போலீசில் ஓப்படைக்க அழைத்து சென்றனர். அப்போது அண்ணாத்துரை தப்பி ஓடி விட்டார். அவரை அரியலூர் போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அண்ணாத்துரை சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. உடனே அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த அண்ணாத்துரையை கைது செய்தனர். பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

9 ஆண்டுகளுக்கு பின்பு கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News