செய்திகள்

சிவகங்கையில் மாணவியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தந்தை உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2017-11-09 15:56 IST   |   Update On 2017-11-09 15:56:00 IST
சிவகங்கையில் மாணவியை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தந்தை உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 48). இவரது மகள் ரெயில் நிலையம் அருகே தொண்டி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தந்தை கருப்பையாவிடம் கூறியுள்ளார்.

உடனே அவர் தனது நண்பர் அருள் பாண்டியனுடன் சென்று மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 மாணவர்களும் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் கருப்பையா, அருள் பாண்டியனிடம் மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது 4 பேரும் அருள்பாண்டியனை கத்தியால் குத்தியும், கருப்பையாவை அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்த அருள்பாண்டியன் ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களையும் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களும் மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Similar News