செய்திகள்

காரைக்குடியில் திருமண ஆசை காட்டி நர்சு பாலியல் பலாத்காரம்: கட்டிட தொழிலாளி கைது

Published On 2017-11-05 18:13 IST   |   Update On 2017-11-05 18:13:00 IST
திருமண ஆசை காட்டி நர்சை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் ஜீவானந்தம் (வயது38), கட்டிட தொழிலாளி.

இவர் காரைக்குடி அரியக்குடி பாரதிநகரைச் சேர்ந்த தனது உறவு பெண்ணுடன் பழகி வந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த அந்த பெண், ஜீவானந்தம் உறவினர் என்பதால் நெருக்கமாக பழகினார். அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்தனர்.

இந்த நிலையில் ஜீவானந்தம் திடீரென திருமணத்திற்கு மறுத்தார். இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார்.

அதில், தன்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஜீவானந்தம் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இருமுறை கர்ப்பம் அடைந்த தான் அதனை கலைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது திருமணத்திற்கு ஜீவானந்தம் மறுப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஜீவனந்தம் கைது செய்யப்பட்டார்.

Similar News