செய்திகள்

கோடியக்கரை: மீனவர்கள் வலையில் ஒரே நாளில் 12 டன் மீன்கள் சிக்கின

Published On 2017-11-05 16:44 IST   |   Update On 2017-11-05 16:45:00 IST
கோடியக்கரை கடற்பகுதியில் மீனவர்கள் வலையில் ஒரே நாளில் 12 டன் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த ஆறுமாத சீசன் காலத்தில் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், வல்லம் மீன்பிடி சீசனுக்காக வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மீன்பிடிக்க சென்று வரும் மீனவர்கள் 50-க்கும் மேற்பட்ட வகையான மீன் வகைகளை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் புயல் சின்னம் உருவாகி கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான தங்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் அதிகாலை சென்ற மீனவர்கள் மதியம் கரை திரும்பினர். அவர்களது வலையில் சுமார் 2 டன் மட்லீஸ் மீன் சிக்கியது. இந்த மீன்கள் கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உடன் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாள்தோறும் காலை 4 மணிக்கு சென்று 11 மணிக்குள் குறைந்த தூரம் சென்று கரை திரும்பும் மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதனால் மழையும் பொருட்படுத்தாது மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீனவர்கள் வலையில் காலா, நீலக்கால் நண்டு, மூன்று புள்ளி நண்டு, வாவல், மடவாய், பாலை, கொய் ஆகிய மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. இதில் சுமார் 12 டன் மீன்கள் கிடைத்துள்ளது.

மழை நீர் கடலில் கலப்பதால் ஆழ்கடலில் உள்ள மீன்கள் கரையை நோக்கி வருவதால் அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாகவும் நல்ல விலை கிடைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Similar News