செய்திகள்

நாகை அருகே அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

Published On 2017-11-02 17:01 IST   |   Update On 2017-11-02 17:01:00 IST
நாகை அருகே அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் திருமருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமருகல்:

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த ஆதீனகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 42). இவர் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிங்காரவேலு, மற்றும் சித்ரா சென்றனர்.

பின்னர் நேற்று இரவு சிங்காரவேலு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகை, மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ரூ.50 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் பற்றி திட்டசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரசு ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை - பணம் கொள்ளை போன சம்பவம் திருமருகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News