செய்திகள்

ஆவடி, பள்ளிக்கரணை - சேலையூரில் ஏரிகள் நிரம்பி வழிகிறது

Published On 2017-11-02 15:34 IST   |   Update On 2017-11-02 15:35:00 IST
தொடர்மழை காரணமாக ஆவடி, பள்ளிக்கரணை, சேலையூரில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தாம்பரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

தொடர்மழை காரணமாக காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஏரி, திருநீர்மலை ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மதனபுரம் ஏரி உள்பட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. திருநீர்மலை பெரிய ஏரியில் உபரிநீர் நாட்டு கால்வாய் வழியாக வெளியேறுகிறது.

ஆவடியை அடுத்த கோவில் பதாகை ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் லட்சுமிபுரம் ஏரி நிரம்பி உபரிநீர் சாலை வழியாக வெளியேறி புழல் ஏரிக்கு செல்கிறது.

சாலையில் இருந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் பொது மக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீரை மதகுகள் வழியாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர்.

ஆனால் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி அருகே உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீநகர், காந்தி நகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜேஷ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது.

ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். கரைகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம் (மி. மீட்டரில்) வருமாறு:-

ஆர்.கே.பேட் - 2

செங்குன்றம் - 15

Similar News