அந்தியூர் அருகே டெங்கு நோய்க்கு இளம்பெண் பலி
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சித்திரெட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி தீபா (25). ஒருமகன் உள்ளான்.
இந்த நிலையில் 2-வதாக கர்ப்பிணியான தீபாவுக்கு கடந்த 10நாட்கக்கு முன்பு தான் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தீபாவுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் அடித்தது இதனால் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் குணமாகததால் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். குழந்தை பெற்ற 10-வது நாளில் டெங்கு பாதிப்புக்கு இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உறவினர்கள் கூறும்போது “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தீபாவுக்கு தீவிரசிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம்” என்று புகார் கூறினர்.
தீபாவுடன் சேர்ந்து ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நோய்க்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.