செய்திகள்

சிதம்பரம் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சம் மோசடி: 7 பேர் கைது

Published On 2017-10-09 13:13 GMT   |   Update On 2017-10-09 13:13 GMT
சிதம்பரம் அருகே கூட்டுறவு சங்கத்தில் போலியாக சிட்டா அடங்கல் பயன்படுத்தி பயிர்காப்பீட்டு திட்டத்தில் 10 லட்சத்தை மோசடி செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:

சிதம்பரம் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளராக ஜெகன்மோகன் பணியாற்றி வருகிறார். இவர் வணிக குற்றவியல் புலனாய்வு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரியிடம் புகார் மனு கொடுத்தார்.

சிதம்பரத்தை அடுத்த நந்திமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை போலியாக சிட்டா அடங்கல் பயன்படுத்தி பயிர்காப்பீட்டு திட்டத்தில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 434 ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி கடலூர் வணிக குற்றவியல் புலனாய்வு துறை போலீசாரிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ரங்கநாதன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ராஜமோகன் மற்றும் சுந்தரமூர்த்தி, மோகன், ஆறுமுகம், கவியரசு, ஜெயகாந்தன், ரவிசந்திரன், ராஜசேகர், சுகந்தி ஆகிய 12 பேரும் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரங்கநாதன், கிருஷ்ண மூர்த்தி, ராஜமோகன், ஆறுமுகம், கவியரசு, ஜெய காந்தன், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News