பொறையாறு அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
தரங்கம்பாடி:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல்,திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தஞ்சை,நாகை மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரை சேர்ந்த 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளான். இந்த நிலையில் மேலும் ஒரு பெண் பலியாகி இருக்கிறார்.
நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள சாலியப்பன் நல்லூர் கிராமம் கண்ணப்பன் மூலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (28). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கிருஷ்ணவேணிக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்தது.
அவரை பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மீண்டும் காய்ச்சல் அதிகமானது. அவரை காரைக்காலில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி இறந்தார். பொறையாறு பகுதியில் மர்ம காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.